12 August, 2011

புற்று நோய்- பயப்படவேண்டிய நோய்?


புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!

- ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

புற்று நோய்க்கு என்ன காரணம்?

பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.

அவை:

குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில்படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். 'மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கவும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பராக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

'ஹியூமன் பபிலோமாவைரஸ்' (Human Papilloma Virus - HPV) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?

முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு 'பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு 'மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது 'சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று 'ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன.

அவை:

1. ஆபரேஷன்
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்)
3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்)

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...