30 July, 2011

நல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி?

ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு  மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்!
நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்!
உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி!
கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’  ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும்.
மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(கொஞ்சம் சிரமம் தான்), உண்மையில் நல்ல மட்டன் வாங்க இதோ டிப்ஸ்கள்!

செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா?
மட்டன் (Mutton) என்று  சொல்லப்படுவது செம்மறி ஆடு இறைச்சிதான்.
சவான் (Chevon) என்றால்தான் வெள்ளாட்டு இறைச்சி.
நமக்கு செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா? என்று முடிவு செய்யுங்கள்?
நிறைய பேர் வெள்ளாடு இறைச்சியைதான் விரும்புகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை! ஆனால் செம்மறி ஆடு இறைச்சிதான் மிகவும் ருசியானது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை!
எல்லோரும் வெள்ளாடு இறைச்சி வேண்டும் எனக் கேட்பதால் கசாப்புக்கடைகாரர் செம்மறி ஆட்டின் வாலில் கருப்பு மை தடவியும், அல்லது வேறு வெள்ளாடு வாலை செம்மறி ஆட்டின் வாலிற்கு பதிலாக சொருகி பாவலாகாட்டும் கசாப்புகடையும் உண்டு. வெள்ளாடு இறைச்சிதான் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் காசாப்பு கடையில் தொங்கும் இறைச்சியின் வாலை தொட்டு மை தடவி உள்ளதா என பாருங்கள், அல்லது ஒட்டு வாலா என அறிய இழுத்து பாருங்கள். ஒரு சில கில்லாடி கடைகாரர் கருப்பு நிறம் ஆக்க ஹேர் டை அடித்துவிடுகிறார்கள் தொட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது! மேலும் ஒட்டல் வால் பகுதியை உள்பக்கமாக தைத்துவிடுவார்கள் அதுவும் எளிதா கண்டுபிடிக்கமுடியாது! எனவே செம்மறி ஆடு இறைச்சியை கண்டு பிடிக்க ஒரே டிப்ஸ்  இறைச்சியில் கடைகாரர் எவ்வளவுதான் கழுவினாலும் லேசாக அதன் ரோமங்கள் ஒட்டிகொண்டிருக்கும் அதை உன்னிப்பாக கவனித்து இது செம்மறி ஆடு இறைச்சி எனக் கண்டு பிடிக்கலாம்! அது இல்லாதது வெள்ளாடு! மேலும் செம்மறி ஆடா, வெள்ளாடா, அல்லது மாட்டிறைச்சியா என கண்டுபிடிக்க என்சைம் பரிசோதனை, பைபர் எண்ணிக்கை பரிசோதனை,அனட்டாமிக்கல் பரிசோதனை பல பரிசோதனைகள் இருந்தாலும் அவைகள் கால்நடை மருத்துவர்களால் மட்டும் முடிந்தவைகளாக உள்ளது. ஒரு அதிர்ச்சி கொசுறு செய்தி, ஒரு நாயின் தலையை,கால்களை துண்டித்துவிட்டு தோலை உரித்துவிட்டு தொங்கவிட்டால் அசல் வெள்ளாட்டு இறைச்சி போன்றே இருக்கும்.இதை கண்டுபிடிக்க நிச்சயம் கால்நடை மருத்துவரின் உதவி தேவை! முனிசிபல் மற்றும் கார்ப்பரேஷன் பகுதியில் கால்நடை மருத்துவர் இறைச்சியை பரிசோதித்து அதன் தொடை பகுதியில் அவர் பணிபுரியும் நிலையத்தின் முத்திரையை பதித்திருப்பார், தலையில் நெற்றி பகுதியில் அரக்கு சீல் இருக்கும்  இவைகளை கவனித்து வாங்கலாம். தலையில் இருக்கும் முத்திரை அந்த ஆட்டை உயிருடன்  இருக்கும் பரிசோதனை செய்ததற்கான அடையாளம்.இந்த அடையாளம் இருந்தால் தான் இறைச்சி கூடத்திற்குள் ஊழியர்கள் அனுமதிப்பார்கள். அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது கால்நடை மருத்துவரால் மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டுள்ள முத்திரை!

இளம் இறைச்சியா? கிழட்டு ஆட்டு இறைச்சியா?
தொங்கி கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்து பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். 1)கழுத்து பகுதி தடிமனாக பெரிதாக இருந்தால் அது வயதானதாக இருக்கலாம். இந்த இறைச்சி வேகவைக்க சிரம்ம படவேண்டும்
2) கழுத்து பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியா இருக்கலாம் அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்தவகை வளவளப்பாக பசை இல்லாமல் இருக்கும். இதுவும் நமது சமையலுக்கு ருசிசேர்க்காது.
3)மிதமான கழுத்து உள்ள இறைச்சி நமது சமையலுக்கு உகந்தது. நமக்கு மனைவியிடமிருந்து வசைகளையும் குறைக்கும்.
4)கழுத்தின் வெட்டு பட்ட பகுதி ஐஸ் கிரீமை வெட்டியது போல் (Smooth cuting) இருந்தால் முன்பே இறந்த ஆட்டினை வாங்கி கசாப்பு செய்திருக்கிறார்கள் என அனுமானிக்கலாம். இதையும் நமது ஆரோக்கியத்தை எண்ணி தவிர்க்கலாம்.
5) கழுத்தின் வெட்டு பகுதி பிசிறுகளுடன் மேலும் இறைச்சி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நல்லது.
6) கிட்னியை சுற்றி கொழுப்பு சூழ்ந்துள்ளதா எனப் பார்க்கவேண்டும். இது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான் அடையாளம்.
7) பொதுவாக ஆண் கிடாதான் கசாப்புக்கு விற்பனைக்கு வரும். அதனால் சிறிதாக இருந்தால் இளம் குட்டி! பெரிதாக கெட்டியாக இருந்தால் வயதானதாக இருக்கலாம். இதை வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் இல்லை.
8) தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை. வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

எந்த பகுதி இறைச்சியை வாங்கலாம்?
சிலர் தொடை கறியை மட்டும் கொடுங்கள் என்று வாங்குவார்கள் அந்த பகுதி கொஞ்சம் வேகுவதற்கு நேரம் அதிகம் ஆகும். ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி,  தொடை பகுதி,சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்கும்மாறு வாங்குவது நல்லது. இளம் சிகப்பு ( ரோஜா) நிறம் இறைச்சியாக இருந்தால் நன்று. கொஞ்சம் டார்க்காக இருந்தால் அது கிழடாக இருக்கலாம் இதை வேகவைக்க சோடா உப்பு, பப்பாளி காய் என பல டிப்ஸ்கள் தேவைபடும். மேலும் சாப்பிட்டுமுடித்துவிட்டு பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் இறைச்சி துகள்களை அகற்றும் வேலை பிரதானமாக இருக்கும். ஆடு அறுக்கும்போதே அருகில் காத்திருந்து சுடசுட அந்த இறைச்சியை வாங்கிவந்து வேகவைத்தால் அது இளம் ஆடாக இருந்தாலுமே வேகவைக்க சிரமப்படவேண்டும். ஆடுகள் அறுக்கப்ட்டு சில மணிநேரங்கள் தோங்கவிடும் போதுதான் தசைபகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகி சமைக்க தயாராகிறது.எனவே அப்படி வாங்கி வந்த இறைச்சியை நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணி நேரம் வைத்திருந்து பிறகு சமைக்கலாம்.
இரத்தம், குடல் வறுவல் அபிமானிகளுக்கு ஒருவேண்டுகோள் இதில் சத்துக்களும் குறைவு, ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது இல்லை. ஆசையாக இருந்தால் சில நாட்கள் சாப்பிடலாம். ஆனால் நன்றா சமைத்து!
இந்த ஞாயிறு இந்த டிப்ஸ்களுடன் கசாப்புகடைக்கு வீறுகொண்டு செல்லுங்கள். நல்ல தரமான மட்டன் வாங்குங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்குங்கள்! டிப்ஸ்கள் வழங்குவது எளிது! கசாப்புகடைகாரரின் மீசையை கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் அவரின் கசாப்பு வெட்டு கத்தியின் மேல் ஒரு கண் இருக்கட்டும். பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் நீங்கள் குறிப்பிடும் இறைச்சியை தைரியமாக கேட்டு வாங்குங்கள்! இல்லை என்றால் கடையை மாற்றுங்கள்!!  என்னுடைய டிப்ஸ்களை நீங்கள் நடை முறைப்படுத்தி வாங்க முயற்சித்து கடைகாரர் மூலம் இலவசமாக கிடைக்கும் திட்டுகளோ, இரத்தக் காயங்களுக்கு ஆசிரியர் குழு பொறுப்பு இல்லை!!

10 July, 2011

இலவச பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது.

தமிழகமுதலவர்
சென்னை, ஜூலை 9: தமிழக அரசின் இலவச பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக 1,600 குடும்பங்களுக்கு பசுவும், 1,600 குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கப்பட உள்ளன.  ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் இலவசமாக பசு மாடுகளும், ஆடுகளும் வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து, அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:  வெண்மைப் புரட்சி: குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் தேர்தல்  அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, 60 ஆயிரம் கறவை மாடுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்.  அதன் முதல் கட்டமாக, அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.  ஜெர்சி பசுக்கள்: இந்தத் திட்டத்தின்கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் அளிக்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்.  பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். பசுக்களை இலவசமாகப் பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் இருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.  இலவசமாக கொடுக்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும், பசுக்களை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும்.  இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.  இலவச ஆடுகள்: ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.  வரும் ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்துக்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும். கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும் நிலமற்ற ஏழைகளே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள்.  இலவச பசு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். பயனாளிகளே அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆடுகளை அருகிலுள்ள சந்தைகளில் இருந்து ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும்.  தீவனப் பயிர் பெருக்கத் திட்டம்: இந்த 2 திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.  மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

05 July, 2011

உடல் எடையை குறைக்க தினமும் ஒரு வேகவைத்த முட்டை



அழுத்தி பிடித்தால் உடைந்துவிடும் மெல்லிய ஓடுஆடையின் உள்ளே மொழு மொழு மஞ்சள், வளவளப்பான வெள்ளை என கவர்ச்சிகரமாக கூட்டணியில் ஏகத்து சத்துக்களை பொக்கிஷமாக குவித்து வைத்திருக்கும் பெட்டகம் தான் முட்டை!

மூளை வளர்ச்சிக்கு முட்டை:-
கொழுப்பு போன்ற இரண்டுவகையான சமாச்சாரங்கள் தான் (Phosphatidylcholine and sphingomyelin) மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து மூளையின் செயல்பாட்டையும், நலனையும் பாதுகாக்கும் ஆட்சி பொறுப்பை  செய்கிறது. அந்த பணிக்கு சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்யும் (methylation)  பணிக்கு முட்டையில்  உள்ள கொளின் (Choline)  “மூளையாக செயல்படுகிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து தசைகளுக்கு தரப்படும் சமிக்கை உத்திரவுகளை கொண்டு சேர்க்கும் காதல் தூதுவன் அசிட்டைல்கோளின் அவர்களின் மூலப் பொருளாகவும் இருக்கிறதுசத்துணவில் முட்டை நமது வருங்காலத்தின்  விதை! அதொடி ஒமேக்கா 3 கொழுப்பு, அத்தியவசிய அமைனோ அமிலங்கள், விட்டமின்கள் ஏ, டி, , பி2 ,பி1,பி12 , புரதம், மாவு  சத்துபல தாதுஉப்புக்கள் என பல குவியல்களை உள்ளடக்கியது முட்டை!
ஆஃப் பாயில் முட்டை:-

மெல்லிய வெண்மை நிற விரிப்பில் மெத்தென புடைப்பாகவும் பளபளப்பாகவும் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாகவும் ஆங்காங்கே கருப்பு கீற்றுகளும் ஒருங்கிணைந்த அதை லாவகமாக கையாண்டு ஒரே சுருட்டில் வாயினுள் நுழைத்து சுவைக்கும் போது பெப்பரின் வாசனையும், முட்டையின் மென்மையான  சுவையும் அருமை அருமை! உடல் எடையை அதிகரிக்க, கட்டுமஸ்தான உடலாக கொண்டுவர பலராலும் சாப்பிடப்படுகிறது. சாலமனோலா என்ற  கிரிமிகள் பாதிக்கபட்ட கோழியிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இந்த கிரிமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இது மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தோல் சம்மந்தப்ட்ட வியாதிகளும் வரவாய்ப்புள்ளது. புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் பச்சை முட்டையையோ அல்லது ஆஃப் பாயில் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும். மூச்சு திணறல் அறிகுறி தோன்றலாம்!
நன்றாக வேக வைத்த முட்டை:-
முட்டையில் 211 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்றாலும் முட்டையில் உள்ள லெசித்தின் என்ற பொருள் உடல் கொலஸ்ட்ராலை கிரகிப்பதை தடைசெய்து விடுகிறது எனவும் கொலஸ்ட்ரால் நன்றாக  வேகவைக்கப்படும்போது ஆக்ஸிடேசன் ஆகி கொலஸ்ட்ரால் என்ற பூச்சாண்டியை துரத்திவிடுகிறது எனவும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றது.
முட்டையை வேக வைப்பது எப்படி?
எத்தனை முட்டைகளை வேக வைக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தை தெரிவ செய்து அதில்  முட்டைகளை  போட்டு முழுகும் வரை தண்ணீரை ஊற்றவேண்டும். முட்டைகளை நெருக்கமாக அடுக்க கூடாது. கொதிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி  உடைந்துவிடும். முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் முட்டை அடங்கிய பாத்திரத்தை வைத்து அதில் உள்ள தண்ணீர் கொதிக்கும் நிலை வரும் வரை காத்திருந்து பாத்திரத்தை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு ஸ்வாலையை குறைத்து வைத்து 12 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பெரிய முட்டைகளாக இருந்தால் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.பின் குளிர்ந்த நீருக்கு முட்டைகளை மாற்றி குளிரவைத்து ஓட்டினை உரித்து உஜாலா போடாமலேயே பளிச்சிடும் வெண்மையில் உள்ள முட்டையை சாப்பிடலாம்.
பாத்திரத்தில் போடும் முன் முட்டையில் கெட்ட வாசனை உணர்ந்தால் அதை பயன்படுத்தக்கூடாது.
முட்டையில் வெடிப்பு, கீரல் இருந்தால் அதையும் விலக்கவேண்டும்.
ஒரு சமமான தரையில் முட்டையை சுழலவிட்டால் ஒரே சீராகா சுற்றாமல்  தடுமாறினாலும் அது கெட்டுபோனதாக இருக்கலாம்.
தண்ணீருக்குள்  மூழ்காமல் மிதக்கும் முட்டைகளை விலக்கவேண்டும்.
தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் முட்டையிலிருந்து குமிழ்கள் வெளிப்பட்டாலும் அந்த முட்டைகள் பயன்படுத்தக்கூடாது. முட்டையில் கீரல் உள்ளது என்ற அடையாளம்!
முட்டையின் ஓடு கெட்டியாக  இல்லாமல் ரப்பர் போல் இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.
நன்றாக வேக வைத்த முட்டையும் கலோரியும்:-
வேக வைத்த முட்டையில் அனைத்து சத்துகளும் குறைவில்லாமல் உள்ளது. 77.5 கலோரிகள்,, 5 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் செச்சுரேட்டடு கொழுப்பு, 190 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 55 மில்லி கிராம் சோடியம், 1கிராம் மாவுசத்து, 1கிராம் இனிப்பு சத்து, 6 கிராம் புரதச்சத்து, 20 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்து என அடுக்கி கொண்டே போகலாம்.
நன்றாக  வேகவைத்த முட்டையில் 77.5 கலோரிகள் எரிப்பொருள் உள்ளது. இந்த முட்டையில் அனைத்து சத்துக்களையும் கிரகிக்க  நமது உடல் 100 கலோரிகள் மேல் எரிப்பொருள் செலவழிக்கிறது. எனவே நன்றாக வேகவைத்த முட்டை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைகிறது என்கிறது ஆராய்ச்சி!

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...